காக்க காக்க பார்ட் 2 வேகம் பிடிக்கும் முயற்சி!
கலி காலம், பனி காலம் மாதிரி, இது பார்ட் 2 காலம் போலிருக்கிறது. டப்பா படமாக இருந்தாலும், அப்படம் முடியும் போது பார்ட் 2 வுக்கான ஒரு லீட் கொடுத்து முடித்து வைக்கும் இயக்குனர்களின் நம்பிக்கை, இன்னும் பல வருஷத்துக்கு இந்த கலாச்சாரத்திற்கு மூடு விழா நடத்தாமல் வைத்திருக்கும்! ‘மிருதன்’ என்றொரு படம் வந்தது. சமீபகாலத்தில் வந்த மிக கொடுமையான மொக்கை படம் என்ற பெயரை தட்டிச் சென்ற இப்படத்திற்கே, பார்ட் 2 லீட் கொடுத்துதான் படத்தை முடித்திருப்பார் இயக்குனர். இப்படி உலகமே எதிர்பார்க்கும் பாகுபலியில் ஆரம்பித்து, ஊரே காறித்துப்பும் படங்கள் வரைக்கும் இந்த பார்ட் 2 கலாச்சாரம் படு பயங்கரமாக பரவி வருகிறது.
இந்த நிலையில்தான், எல்லாரும் ரசித்த ‘காக்க காக்க’ படத்தின் பார்ட்2 வுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு. காக்க காக்கவுக்கு பிறகு என்ன காரணத்தாலோ சூர்யாவை திரும்பிக் கூட பார்க்காமல் இருந்தவர், கபாலிக்கு பிறகு இந்த படத்தை நம்பிக்கையோடு கையில் எடுத்திருக்கிறாராம். சூர்யாவுக்கும் கவுதம் மேனனுக்கும் நடுவில் ஒரு பனிப் போர் நடந்து கொண்டிருந்ததல்லவா? இந்த பார்ட் 2 மூலம் அந்த பனிப்போருக்கும் ஒரு முடிவு வரும் சூழ்நிலை அமைந்திருக்கிறது.
பார்ட் 1 ல் யார் யார் இருந்தார்களோ, அத்தனை பேரும் இதிலும் இருப்பார்களாம். அந்த கதையின் தொடர்ச்சியாகவும் இது இருக்கும் என்கிறார்கள். பிரமாண்டத்திற்கு பெயர் போன தாணுவே இப்படியொரு வாய்ப்பு கொடுக்கும் போது, சும்மாயிருப்பாரா கவுதம்? தங்க பேனாவால் பிள்ளையார் சுழி போட ஆரம்பித்திருக்கிறாராம்.
கம்பீரமா ஒரு காக்கிச்சட்டை பார்சேல்…