ஆந்தை விழிக்கும் நேரத்தில் ஒரு அனுபவப் பொங்கல்!
லாண்டரி கடையில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாதல்லவா? காதல் அப்படிதான். சும்மா புரட்டி போட்டுட்டு போய்க்கிட்டேயிருக்கும். ‘அழகே… வந்து பழகேன்’னு கூப்பிடுறதுக்கு ஆயிரம் ரைட்ஸ் இருந்தாலும், அந்த காதல் மண்டிக்கால் போட்டு மனசார கெஞ்சும்! ‘கெஞ்சட்டும்… கேவி கேவி அழட்டும்… மாடிப்படியில் உருளட்டும்…. அது அவரு பாடு. நமக்கு எதுக்குய்யா இந்த வேல? ராத்திரியிலயும் தூங்க விட மாட்டேன்றாரு. பகல்லயும் பதுங்க விட மாட்டேன்றாரு. நல்லா வந்துச்சுரா காதல்’ என்று மேனேஜர்கள் கதறினார்கள். ராசாவோட குதிரைங்கிற பெருமை இருக்கலாம். ஆனால் அதுங்களுக்கு ராப் பகல் ஏது?
ரொம்ப வித்தியாசமான டைரக்டர் அவர். எப்போது நோக்கினாலும், அப்போதுதான் நாலு நாள் சேர்ந்தாற் போல உறங்கி விழித்தது மாதிரியிருப்பார். அந்த கண்களில் இனம் புரியாத சோகம் தாண்டவம் ஆடும். கதை விவாதம் என்ற ஒன்று தினந்தோறும் நடக்கும். சில வாரங்களோ, பல மாதங்களோ கூட அது நீளும். ஆனால் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் சொல்கிற எதையும் கேட்டுக் கொள்ள மாட்டார். அப்புறமெதற்கு அவர்கள்? தான் சொல்வதை கேட்பதற்காகதான். அட… அவராவது அதை கோர்வையாக சொல்வாரா என்றால், மண்ணாங்கட்டி. அவர் பேசுவதை அவரே நவீன தொல்காப்பியர்களை வைத்து தமிழில் ரீமேக் செய்தால்தான் உண்டு.
அதுவே அவரிடம் இருக்கும் பெண் உதவி இயக்குனர்கள் என்றால், அவர்களுக்கு சீன் சொல்கிற சுதந்திரம் உண்டு. அதை பயன்படுத்துவாரா, மாட்டாரா என்பதெல்லாம் படமாகி வருகிற வரைக்கும் புரிந்து கொள்ள முடியாத ரகசியம். தன்னுடன் மாய்ந்து மாய்ந்து கதை விவாதம் செய்யும் உதவி இயக்குனர்களுக்கும் உயிர் இருக்கும். பசி இருக்கும். பிள்ளை குட்டிகள் இருப்பார்கள். பஸ் இருக்கும். பஸ்சில் டிக்கெட் இருக்கும். என்பதெல்லாம் எதுவுமே தெரியாத, அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத ஏகாந்தி அவர். இல்லையென்றால் மதியம் இரண்டு மணி வரை பேசிக் கொண்டேயிருக்கிற அவர், தனக்கு மட்டும் சிக்கன் மட்டன் ஐட்டங்களை வரவழைத்து வெட்டுவதையும், சரியாக இரண்டு பத்துக்கு வாட்சை பார்த்துவிட்டு, ‘போய் சாப்ட்டுட்டு வந்திடுறீங்களா?’ என்று ஷட்டரை குளோஸ் பண்ணிவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுவதையும் எந்த மனிதாபிமானத்தில் சேர்ப்பது?
ஆனாலும் அவர் இயக்கிய படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் வசூலை வாரிக்குவித்தன. அதெப்படி? அதுதான் அவரது தனிப்பட்ட திறமை. இளமை துள்ளுகிற வயசில் அண்ணன் தம்பிகளாக படமெடுக்க வந்தவர்கள் இன்று தமிழ்சினிமாவின் அசைக்க முடியாத சூத்திரமாகிவிட்டார்கள். இருந்தாலும், இந்த அண்ணன் மட்டும் பிச்சு பிச்சு போட்ட பிகாசோ ஓவியம் போல யாருக்கும் புரியாத படைப்பாளி.
இல்லையென்றால் இவர் இயக்கிய பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆன அந்த வருத்தப்படாத வாலிபர், ‘ஆளை விடுங்கடா சாமீ’ என்று பாதியிலேயே ஷுட்டிங்கிலிருந்து தப்பித்து ஓடி வந்திருப்பாரா? இத்தனைக்கும் அது அவரே வளர்வதற்காக நாலு ஆபிஸ் கதவை தட்டி வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்த நேரம். அவருக்கே பொறுக்க முடியாத அவஸ்தை அது என்றால் புரிந்து கொள்ள வேண்டியதுதான். அட… அது எப்ப? இரு வேறு உலகங்கள் பற்றிய கதை அது. சினிமாவில் நீண்ட கால தயாரிப்புகள் இருக்கின்றன. ஆனால் இது நீண்ட காலத்திற்கும் முந்திய அந்தகால தயாரிப்போ என்று அஞ்சுகிற அளவுக்கு வருஷக்கணக்காக நீண்டது. அதில் ஹீரோவுடன் படம் முழுக்க டிராவல் ஆகிற கேரக்டர் வருத்தப்படாத வாலிபருக்கு. இருபத்தைந்து நாள் நடித்திருந்தார். ஒவ்வொரு நாளும் பிரசவ வார்டில் சேர்த்து பிள்ளையை கிழித்தெடுக்கிற மாதிரியே, எல்லாரிடமும் நடிப்பை வாங்கிக் கொண்டிருந்தார் டைரக்டர்.
‘அந்தாளு என்ன நினைக்கிறாருன்னு நமக்கும் புரிய மாட்டேங்குது. நமக்கு புரியற மாதிரியும் சொல்லித்தொலையவும் மாட்டேங்குறாரு. அட… நாம எந்த ஸ்பாட்ல நிக்குறோம்னு தெரிஞ்சா அதை வச்சாவது புரிஞ்சுக்கலாம்னா, சுத்தி பச்சை துணியை தொங்க விட்டுட்டு க்ரின்மேட் ஷாட்டுன்னு எடுத்துகிட்டு இருக்காரு. மண்டையிலயிருக்கிற பல்பை பீஸ் போக வைக்காம விட மாட்டாரு போலிருக்கே’ என்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தவர்தான். அதற்கப்புறம் அந்த திசைக்கே போகவில்லை அவர். நல்லவேளை… அங்கிருந்து ஓடி வந்தவருக்குதான் ஒன்பதாம் இடத்துல குரு. அதற்கப்புறம் அவர் செல்வாக்கு உயர்ந்து இன்று பல கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு டாப் ஹீராவாகிவிட்டார்.
இவரென்ன ஆனார்?. படம் வெளிவந்தது. அட்டர் பிளாப். கொல்லன் பட்டறயில கோடாலி செய்யுறவர் கூட, ப்ரிப்ரேஷன் இல்லாமல் போவதில்லை. கரி எவ்வளவு வேணும்? சம்மட்டி சைஸ் என்ன? அடிக்கிற ஆளுக்கு எனர்ஜி போதுமா? அல்லது பாதியிலேயே பல்ஸ் இறங்கிருமா? என்றெல்லாம் பார்த்து பார்த்துதான் ஒரு கோடாலி செய்வார். இவர் அப்படியா? சுமார் பதினேழரை கோடி லாஸ், நஷ்டத்தை இவர் தலையில் கட்டிவிட்டது நிறுவனம்.
இவர் பண்ணிய ராவடியில் ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஓடிப்போன ஒளிப்பதிவாளர், தனக்காக ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஓட்டல் ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு அறையிலிருக்கும் லேன்ட் லைன் போனையும் துண்டித்துவிட்டு படுத்துவிட்டார். சுமார் ஒன்றரை நாள், யூனிட் முழுக்க, பிரேக் டவுன் ஆன அரசு பஸ்சை போல, நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. அப்புறம் ஓட்டல் நிர்வாகத்திடம் கெஞ்சி வேறொரு சாவி போட்டு உள்ளே போய், ஆளை அமுக்கிக் கொண்டு வந்தார்கள். ‘அந்தாளு ஒழுங்கா வேலைய பார்க்கலேன்னா இப்படிதான்’ என்றார் கேமிராமேன். இவங்க ஈகோவுல நம்ம தலைய உருட்றானுங்களே… என்ற கடுப்பில்தான் நம்ம நேரம் வரட்டும் என்று காத்திருந்தது நிறுவனம். சரியாக கத்தி வைத்தார்கள். இன்னும் கடன் தீர்ந்தபாடில்லை.
சூடான இஸ்திரி பொட்டியில சுள்ளுன்னு தண்ணீர் துளியை விசுறன மாதிரிதான், அவ்வளவு மனக்குடைச்சலுக்கு நடுவிலும் காதல் வந்தது இவருக்கு. கல்யாணம் குடும்பம் குழந்தைன்னு ஆயிருச்சேன்னு ஒதுங்கிப் போற உலகமா இது? முதல் மனைவி விவகாரத்து பெறுவதற்கு காரணமான அந்த நடிகை வெகு காலம் கழித்து மீண்டும் கிராஸ் ஆனார் இவர் வாழ்வில். ஏதோ ஒரு வார இதழின் வண்ணப்பக்கத்தில் அவர் புகைப்படம் வந்திருந்தது.
பக்கோடா போட்றவன் பார்சல் கட்ற பேப்பரையும் நினைச்சுகிட்டா மாவை எண்ணை சட்டியில போடுவான்? அப்படியொரு பக்கோடா பார்சலோ, அல்லது வரவழைத்த சஞ்சிகையோ? கரெக்டாக அந்த அட்டைப்படம் அவர் கண்ணில் பட்ட நேரம், ஆந்தையே ரெஸ்ட் எடுக்கப் போகலாமா என்று நினைக்கிற நடுராத்திரி இரண்டு மணி. காதலால் கசிந்துருகிய இருவருக்கும் திடீர் சண்டை வந்தது. ஏன்? எதற்கு? என்பதெற்கெல்லாம் ஒரு காரணம் வேண்டுமா என்ன? வந்தது… அவ்வளவுதான். திடீரென தனது காதல் கதவோரம் நாலு தெருநாயை கட்டி வைத்து டைரக்டரு வரும்போதெல்லாம் காதே கிழிகிற அளவுக்கு குறைக்க விட்டார் நாயகி.
பாக்டீரியா? உடலுக்கு ஆபத்தானவை. அவற்றை மூன்று வழிகளில் விரட்டியடிக்கலாம். உங்களுக்கு தேவை ஜெர்மன் ஃபார்முலா! ‘ஒன்று… அந்தாளு வந்தா கதவை திறக்காதே. இரண்டு… அந்தாளு குரல் கேட்டா காதை மூடிக்கோ. மூன்று… அந்தாளு காத்து பட்டாலே டெட்டால் போட்டு குளிச்சுரு’ என்று தனக்குத்தானே கோல்‘கேட்’ போட்டுக் கொண்டார் அந்த நடிகை. அதையெல்லாம் தாங்குகிற மனசா நம்ம இயக்குனருக்கு? ரெயின்போ மனசு முழுக்க சிங்கிள் வண்ணம். அதுதான் நடிகையை பற்றிய எண்ணம் என்று தன்னையே ஏக வர்ணன் ஆக்கிக் கொண்டார்.
ஆடிட்டர்களுக்கு முக்கியமானது ஆண்டறிக்கைன்னா, இவருக்கு முக்கியமா இருந்தது ஆன்ட்ரிக்கை! மணிக்கொரு முறை அறிக்கையை சமர்ப்பிப்பதுதான் மேனேஜர்களின் வேலை. தேவதை எத்தனை மணிக்கு எழுந்தது? தேவதை எத்தனை மணிக்கு பிரேக்பாஸ்ட் முடிச்சுது? தேவதை எத்தனை மணிக்கு எந்த ஸ்பாட்ல இருமிச்சு. எந்த ஸ்பாட்ல தும்முச்சு என்று ரிப்போர்ட் தருவதற்காகவே ஆட்களை வைத்திருந்தார். நடிகைக்கு தர்ம சங்கடம். யாராவது தன்னை பின் தொடர்கிறார்கள் என்று தெரிந்தால் அந்த காதல் மனசில் ரொமான்ஸ் பூக்குமா என்ன? மேலும் மேலும் விரிசல் விழுந்தது காதலில். ஒரு கட்டத்தில் பிரிந்தே விட்டார்கள் இருவரும். அதற்கப்புறம் இவரும் கல்யாணம் ஆகி குடும்பம் வாழ்க்கை என்று நல்லப்பிள்ளையாகியிருந்தார். அந்த நேரத்தில்தான் இந்த பாழாய் போன அட்டைப்படம். அதுவும் ராத்திரி இரண்டு மணிக்கு. அந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வருஷமாகியிருக்கலாம்.
மளமளவென ‘இறக்கி’க் கொண்டு, ‘எட்றா வண்டிய’ என்றார். டிரைவர் இருந்தால்தானே? பர்வால்ல… ஆட்டோவுலயே போவாண்டா இந்த டைரக்டரு… என்று கூறிக் கொண்டே வண்டிய பிடித்தவர் போய் இறங்கிய இடம், ‘அரை கிணறை தாண்ட்றியா’ வீட்டுக்குதான். நட்ட நடு ராத்திரி. அவர் படத்தில் வந்த மாதிரியே சுச்சுவேஷன். ‘ஏய்… வெளிய வாடி.. உனக்காக உன்னையே நினைச்சு…’ என்றெல்லாம் சொல்லதான் வாயெடுத்தார். ஆனால் வந்தது வேற லாங்குவேஜ். அது உலகமே கேட்டிராத உற்சாக பிரியர்களின் லாங்குவேஜ். அவ்வளவு அர்த்த ராத்திரியில் தன் வீட்டில் ஒரு ரசிகரா? லேசாக ஜன்னலை விலக்கிப் பார்த்த நடிகைக்கு எல்லாம் புரிந்துவிட்டது. ம்ஹும். இந்த கதவை தற்போதைக்கு குவிக் ஃபிக்ஸ் வைத்து ஒட்டினால் கூட தப்பில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார். வாட்ச்மேன் நிறுத்தியும், நாய்கள் குரைத்தும் கூட, காதலின் வேகம் தணியவில்லை டைரக்டருக்கு.
அதற்குள் அவருக்கு பசியும் எடுத்திருந்தது. மேனேஜருக்கு போன் போடுவாண்டா இவன்… என்று கூறிக் கொண்டே, ‘யோவ்… உடனே சரவணபவன்ல ஒரு பொங்கல், ஒரு வடைய வாங்கிட்டு ஸ்பாட்டுக்கு வந்துரு’ என்று ஸ்பாட்டையும் தெளிவாக சொல்லிவிட்டார். அரை தூக்கத்தில் போனை அட்டர்ன் பண்ணியிருந்த மேனேஜர், ராத்திரி ரெண்டு மணிக்கு மெடிக்கல் ஷாப்பே திறந்திருக்காது. இந்த லட்சணத்துல இவருக்கு சரவணபவன் திறந்திருக்கணுமாக்கும். அதுலயும் பொங்கல் வடை? வௌங்கிரும்… என்று முணுமுணுத்துக் கொண்டே சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார். புயல் மையம் கொண்டிருக்கும் இடம் அவருக்கு புதுசல்லவே?
அதற்கப்புறம் விடிய விடிய நடந்ததெல்லாம் தேவனின் திருச்சபை குறிப்பிலிருந்தே நீக்கப்பட வேண்டிய அருமையான வடிவேலு எபிசோட்கள். இப்போதெல்லாம் டி.வி பொட்டியில் நடிகை ஆடும் ஆட்டம் வந்தால் கூட, தானே சேனல் மாற்றுகிற அளவுக்கு புத்தி தெளிந்திருக்கிறார் டைரக்டர். காதலுக்கு எக்ஸ்பயரி டேட் இல்லை. ஆனால் முன்னாள் காதலிகளுக்கு உண்டுதானே?!
(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிவரும் ‘கோடம்பாக்கம் செக்போஸ்ட்’ தொடரிலிருந்து)