உங்ககிட்ட ஏமாற நான் ஒண்ணும் பழைய நயன்தாரா இல்ல…! 50 லட்சமும் அசால்ட் கெடுபிடியும்?

ஒங்க சண்டையில நான் கொடுத்த ரூவாய மறந்துடாதீங்க என்பது மாதிரி, நிகழ்கால அக்கப் போரில் ஒரு முக்கியமான படத்தை மறந்துராதீங்க என்று குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது வேறு யாருடைய படமும் அல்ல. பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படம்தான். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு இன்னும் ஐம்பது லட்சம் சம்பளம் தர வேண்டுமாம். இரண்டு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி. அவரை நடிக்க அழைத்தால், செம கடுப்பாகிறாராம். ஏன்?
வாங்க… ஷுட்டிங் வச்சுக்கலாம் என்று இதுவரை ஏழுமுறை அழைத்து அவரது கால்ஷீட் வீணாக்கியிருக்கிறார்களாம் இது நம்ம ஆளு தரப்பில். இப்போது யார் அழைத்தாலும், ‘எனக்கு தர வேண்டிய சம்பளத்தை எண்ணி வச்சுட்டு கூப்பிடுங்க. வர்றேன். ஆனால் இன்னொரு முறை கேன்சல் செஞ்சா, அதுக்கப்புறம் நீங்க எங்க போய் முறையிட்டாலும் என் கால்ஷீட் கிடைக்காது’ என்று உறுதியாக சொல்லிவிட்டாராம். சரி… பணத்தை கொடுத்துவிட்டு படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டியதுதானே?
அங்குதான் சிக்கலே. ‘இரண்டு பாட்டு எடுக்கணும். ஒரு பாடலுக்கு 25 லட்சம்னு கணக்கு வச்சா கூட முதல்ல ஒரு பாட்டுக்கான பணத்தை வாங்கிட்டு ஆடு’ என்கிறாராம் தயாரிப்பாளர் டிஆர். ‘ஆங்… அஸ்கு புஸ்கு. இந்த ஒரு பாட்டோட போதும்னு படத்தையே ஏற கட்டிட்டா என்னோட மீதி 25 லட்சம் எள்ளுதான்னு எனக்கு தெரியாதா? நான் ஏமாந்ததெல்லாம் முன்ன. இப்ப எனக்கு பக்குவமும், உலக ஞானமும் ஏராளமா வந்துருச்சு. பணத்தை மொத்தமா வைங்க. மற்றவை கேஷுக்கு பிறகு…’ என்கிறாராம் நயன்தாரா.
எப்படி பேசினாலும் இந்த பால் கோல் அடிக்க மாட்டேங்குதே என்று நொந்திருக்கும் டிஆர், நடிகர் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்று இறுதி எச்சரிக்கை விட்டிருக்கிறாராம். சங்கமே சல்லடையாகிக் கிடக்கு. இதுல இவிய்ங்க வேற…!
