இதுதான் ரஜினியின் கபாலி படக்கதை?
இப்போதெல்லாம் ஒரு படத்தின் இயக்குனர், அப்படத்தில் சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்கள், இவர்களை விட, கதையை கசிய விடும் கலாட்டா பேர்வழிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. பல நேரங்களில் அது சரியாகவும் இருப்பதால், கசிந்ததை அப்படியே அள்ளி வந்து கொட்ட வேண்டிய அவசரத்திலிருக்கிறது மீடியாவும். ரஜினிகாந்த், விஜய், அஜீத், மாதிரி முன்னணி ஹீரோக்களின் படம் என்றால், சுவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் பல்லி கூட, கவ்வ போகும் பூச்சியை விட்டுவிட்டு ஒரு நிமிடம் திரும்பி பார்ப்பதால், ‘கதையளப்பவர்களின்’ ஸ்பீடும் அதற்கேற்ப ஜாஸ்தியாகவே இருக்கிறது.
இது கோடம்பாக்கத்தில் கசிந்த கபாலி படக்கதை. இதில் நிஜத்தின் அளவு எவ்வளவு. பொய்யின் சாராம்சம் எவ்வளவு என்பதெல்லாம் தெரியாது. படித்துவிட்டு நன்றாக இருப்பின், இதையே கூட படமாக எடுத்துவிட்டு போகட்டுமே?
கபாலியில் தனி மனித ஒழுக்கத்தைதான் கையில் எடுத்திருக்கிறாராம் ரஜினி.
சென்னையில் இருக்கும் இளைஞர்கள் சிலர் நாட்டு நலன், மக்கள் நலனுக்காக போராடுகிறார்கள். என்ன செய்தாலும் மாற்ற முடியவில்லையே என ஆதங்கப்படும் அவர்களுக்கு மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் வளர்ச்சி குறித்த வரலாறுகள் தெரிய வருகிறது. இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள மலேசியா பயணிக்கும் அவர்களுக்கு அங்கே ரஜினியின் அறிமுகம் கிடைக்கிறது. மலேசியாவை உருவாக்கிய தமிழர்களில் முக்கியமான கேங்ஸ்டார் ரஜினியிடம் ஆலோசனை கேட்க அவர் மலேசியா, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு காரணமான தனி மனித ஒழுக்கத்தை பற்றியும். அதனை கொண்டு வருவதற்காக தாங்கள் பட்ட பாடுகளையும் விரிவாக பேசுகிறார்.
அவரையே பேக் அப் செய்து இங்கே கூட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டை மாற்ற என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார் கபாலி. அதற்கு வரும் இடையூறுக்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே இரண்டாம் பாதியின் அதிரடி. புரட்சி என்பதை மற்றவன் செய்வான் என எதிர்பார்க்காதே… நீயே முதலில் இறங்கு என்பதே ரஜினி இளைஞர்களுக்கு போதிக்கும் அறிவுரை.
இரு ஒரு தரப்பினர் சொல்லும் கதை. இன்னொரு தரப்போ அதற்கு நேர் எதிராக இருக்கிறது. சென்னையிலிருக்கும் தாதா ரஜினி சிங்கப்பூர் செல்கிறார். சில வருடங்கள் பேராடி அங்கு பெரும் செல்வந்தராகவும் தாதாவாகவும் இருக்கிறார். அங்கு பஞ்சம் பிழைக்க செல்லும் சில தமிழ் இளைஞர்களுக்கு அவர் எவ்வாறு உதவுகிறார் என்பதுதான் அந்த இன்னொரு கதை.
இதில் எது படமாக வரப்போகிறதோ? இப்போதைக்கு முதல் சில நாட்கள் சென்டிமென்ட்டாக சென்னையில் எடுக்கப்படுகிறதாம். அதற்கப்புறம்தான் மலேசியா.
என்னமோ போடா மாதவா?
கட்டுக்க்கதை உண்மை கதையை விட நன்றாக உள்ளது.