வந்தார்… வாங்கினார்… சென்றார்… ஆட்டிட்யூட் சந்தானத்தால் அதிர்ச்சியான திரையுலகம்!
தனது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் புறக்கணித்ததிலிருந்தே பெருத்த சோகத்திலும், அதைவிட பெருத்த கடுப்பிலும் இருக்கிறார் அவர். போங்கய்யா நீங்களும் உங்க பிரண்ட்ஷிப்பும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டதாகவே தெரிகிறது. காரணம்? அண்மையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம்.
சமீபத்தில் விஜய் அவார்ட்ஸ் விருது விழா நடந்ததல்லவா? இந்த முறையும் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை வென்றவர் சந்தானம்தான். வேறு யார் வெல்லுகிற நிலைமையில் இருந்தாலும், அதை கண்டு கொள்ளவா போகிறது விஜய்? சந்தானம் விஜய் டி.வி யின் வளர்ப்பாச்சே? தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் இந்த விருது அவருக்கே என்று அறிவித்தார்கள். அவர் காரை விட்டு இறங்கும்போதே தொகுப்பாளரான நீயா நானா விஜய்யிடம் சொல்லிவிட்டுதான் இறங்கியிருப்பார் போலும்.
இவர் இந்த விருதை அறிவிப்பதற்கும், அவர் விழா நடைபெறும் அரங்கத்தினுள் நுழைவதற்கும் மிக சரியாக இருந்தது. நேராக மேடை ஏறிய சந்தானம், மைக்கை பிடித்தார். தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த விருதை எனக்கு அளிக்கிறீங்க. உங்க எல்லாருக்கும் நன்றி. விஜய் டிவி க்கு நன்றி என்று கூறிவிட்டு…?
கூறிவிட்டு… மேடைக்கு கீழே வந்து மற்ற ஹீரோக்களோடு சில வினாடிகளாவது அமர்ந்துவிட்டு கிளம்புவதுதானே நாகரீகம்? ஆனால் அப்படியே மேடையிலிருந்து கீழே இறங்கி நேராக வெளியேறி அப்புறம் காரேறி போயே வி……..ட்டார்!
இதென்னடா முயலுக்கு வந்த முசுக்கொட்டை எரிச்சல் என்று முணுமுணுக்காத குறைதான் அங்கிருந்த எல்லாருக்கும்!

