நாகரீக அரசியலை நோக்கி தமிழகம்! கங்கிராட்ஸ் கமல் சார்!
அரசியல் வேறு, நட்பு வேறு… என்ற உண்மையை முற்றிலும் புறக்கணித்து எதிர் கட்சி பிரமுகர்களை கண்டாலே பிசாசை கண்டது போல ஓடி ஒளிகிற வழக்கம் ஜெ. காலத்து அதிமுக பிரமுகர்களுக்கு இருந்தது. இந்த ஒரு விஷயத்துக்காவே அவர்களை வெறுப்பேற்றும் விதத்தில் தேடிப்போய் வணக்கம் வைப்பார் மு.க.ஸ்டாலின். அந்த நேரங்களில் எல்லாம் படிக்கட்டு எது? பள்ளம் எது? என்றே தெரியாமல் விழுந்தடித்து ஓடுவார்கள் அதிமுக பிரமுகர்கள். இந்த காமெடி ஏர் போர்ட் வளாகங்களில் அடிக்கடி நிகழும்.
ஜெயலலிதா மறைந்தார். கலைஞர் செயலிழந்தார். இப்போதுதான் மெல்ல கண் விழிக்கிறது தமிழ்கத்தின் அரசியல் நாகரீகம். எதிரெதிர் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நின்று அரட்டை அடிக்கிற அளவுக்கு போயிருக்கிறது தமிழக அரசியல் களம்.
அதை இன்னும் வலுப்படுத்தும் நோக்கத்தில் கமல்ஹாசன் செயல்படுவதை கண்கூடாக ரசிக்க முடிகிறது. முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், தோழர் ஐயா நல்லக்கண்ணு, திமுக தலைவர் கலைஞர், அவரது நெருங்கிய நண்பரும் விரைவில் அரசியல் போட்டியாளராக விளங்கப் போகிறவருமான ரஜினி, இவர்களை சந்தித்து ஆசி பெற்றது மட்டுமல்ல… தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றிருக்கிறார்.
ஒரு ஆரோக்கியமான அரசியலை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்கிற கமல்ஹாசனின் புதிய சிந்தனை பளிச்சென வெளிப்பட்டு வருகிறது. அவரது இந்த நடவடிக்கை பொதுமக்களையும் மகிழ வைத்திருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
கமலின் தேர்தல் நேரத்து நடவடிக்கையும் இப்படியே தொடர்ந்தால்… அது தமிழகத்தின் அதிர்ஷ்டம்!