செல்லதுரையே இருக்கட்டும்… உன்னிப்பாக கவனிக்கும் விஜய்!

வந்தமா? நடிச்சமா? போனமா? என்றில்லாமல் தன்னை சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்கிற ஒருவர்தான் நல்ல ஹீரோவாக வர முடியும். விஜய்யும் அஜீத்தும் இந்தளவுக்கு முதலிடத்தில் இருக்கிறார்கள் என்றால், அது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. கவனிக்காத மற்ற மற்ற ஹீரோக்களுக்குதான் சனி சங்கட திசையில்!

தற்போது விஜய் நடித்து வரும் புலி பட ஷுட்டிங்கில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான விஷயம் இது. இந்த படத்திற்கு நட்டி என்கிற நட்ராஜ்தான் ஒளிப்பதிவாளர். முக்கியமான இந்தி படங்களையெல்லாம் இயக்கியிருக்கும் நட்டி, தனது அசோசியேட் ஒளிப்பதிவாளராக செல்லத்துரை என்பவரை நியமித்திருந்தார். இந்த செல்லத்துரை கே.வி.ஆனந்திடம் ஏராளமான படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தவர். ஒரு சில படங்களை கட்ட பொம்மன் என்ற பெயரில் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். யூனிட்டில் பரபரப்பாக வேலை பார்த்து வரும் செல்லத்துரையை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டேயிருப்பாராம் விஜய். நொடியில் முடிவெடுக்கிற ஆற்றல். அவரது வேக வேகமான செயல்பாடு போன்றவற்றில் மனம் லயித்திருக்கிறார். இது எதுவுமே செல்லத்துரைக்கு தெரியாது.

இந்த நிலையில் நட்டிக்கு சில தினங்கள் விடுமுறை தேவைப்பட்டதாம். விஜய்யிடம் அனுமதி கேட்டவர், ‘சார்… ஒரு நல்ல பிரபலமான கேமிராமேனை கிளாஷ் வொர்க்குக்கு விட்டுட்டு போறேன். அவர் என்னை விட திறமைசாலியாதான் இருப்பார்’ என்று கூறி சில முன்னணி ஒளிப்பதிவாளர்களின் பெயரை படித்தாராம். ‘இதில் உங்களுக்கு யார் வேணுமோ, சொல்லுங்க. அவங்களை வரவழைக்கிறேன்’ என்று நட்டி கூற, பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த விஜய், ‘ஏன்… உங்ககிட்டயே அசிஸ்டென்ட்டா வேலை பார்க்குற செல்லத்துரை மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?’ என்றாராம். இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத நட்டி, ‘இல்ல சார் வந்து…’ என்று ஏதோ சொல்ல முயல, ‘எதுவும் சொல்ல வேணாம். நான் இங்கு வந்ததில் இருந்தே செல்லத்துரையை கவனிச்சிட்டுதான் இருக்கேன். எனக்கு அவர் வொர்க்ல திருப்தி இருக்கு. அவரே இருக்கட்டும்’ என்றாராம் முடிவாக.

கடமையே கண்ணாக இருந்த செல்லத்துரையை பாராட்டுவதா? அடியெடுத்து வச்சா ஆனை முதுகுலதான் வைப்பேன் என்று அடம் பிடிக்காமல் எளிய உழைப்பாளிக்கும் மரியாதை கொடுக்கும் விஜய்யை பாராட்டுவதா? தலைய சுத்துதுப்பா…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அவரா? இவரா? முடிவுக்கு வந்த அஜீத்! முன்னணி நிறுவனம் ஆஹா!

அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது சுசீந்திரன்தான் என்றொரு நியூஸ் கோடம்பாக்கத்தில் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், இந்த செய்திக்கு ரீயாக்ஷ்ன் காட்டி வருகிறார்...

Close