அவரா? இவரா? முடிவுக்கு வந்த அஜீத்! முன்னணி நிறுவனம் ஆஹா!
அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது சுசீந்திரன்தான் என்றொரு நியூஸ் கோடம்பாக்கத்தில் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், இந்த செய்திக்கு ரீயாக்ஷ்ன் காட்டி வருகிறார் சுசீந்திரனும். ஏனென்றால் அஜீத்தை சந்தித்து அவர் கதை சொன்னது நிஜம்தான். ஆனால் க்ரீன் கார்டு கொடுக்க வேண்டிய அஜீத் மவுனமாக இருந்தால் அவர்தான் என்ன செய்வார்? இதற்கிடையில் தான் கேட்ட இரு கதைகளை தராசில் வைத்து நிறுத்து நிறுத்து எடை போட்டுக் கொண்டிருந்த அஜீத், ஒரு வழியாக யார் பக்கம் வெயிட் என்பதை முடிவு செய்துவிட்டார். சுசீந்திரனுக்கு முன்பே அஜீத்தை சந்தித்து கதை சொல்லியிருந்த கே.வி.ஆனந்த்தான் இந்த கோதாவில் வென்றவர்.
இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. ‘கே.வி.ஆனந்த்தை பொறுத்தவரை அவரு எங்க வீட்டு மாப்ள மாதிரி. எப்ப கூப்பிட்டாலும் வருவார்’ என்று ஒருமுறை இந்த நிறுவனத்தின் முதலாளி கல்பாத்தி அகோரம் கூறினார். மாற்றான் தோல்வி. அதற்கப்புறம் அனேகனும் தோல்வி. இருந்தாலும் கே.வி.ஆனந்த் மீது தனி கரிசனம் வைத்திருக்கிறார்கள் அந்த நிறுவனத்தினர். கடைசியாக அனேகன் படத்திற்கு கே.வி.ஆனந்த் சம்பளம் ஏழு கோடி என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் கிசுகிசுப்பு. இந்த நிலையில்தான் மீண்டும் அஜீத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனம் கே.வி.ஆனந்த்தை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது.
முன்பு போல இல்லை அஜீத். முழு கதையையும் கேட்டு விடுகிறார். அதற்கப்புறம்தான் தேதிகளே தருகிறார். எனவே சுசீந்திரன் கதையை விட சூப்பர் லிஸ்ட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் ஏஜிஎஸ், கே.வி.ஆனந்த் சென்ட்டிமென்ட்டை மாற்றக் கூடும் என்பது பொதுவான அபிப்ராயம்.
வழக்கம் போல இந்த படத்திற்கும் தமிழ் அகாராதிக்கு மட்டுமே புரிந்த தலைப்பு ஒன்றை முடிவு செய்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த். அதை அஜீத்திடம் சொல்ல…. ‘அப்படின்னா?’ என்று கேட்டாராம் அவர்.
நாங்களும் அவரு மாதிரியே கேட்போம்ல?