ஏன் என்னை செலக்ட் பண்ணீங்க? டைரக்டரை திகைக்க வைத்த நந்திதா!

உப்புக்கருவாடு… ராதாமோகன் படம்! இதற்கப்புறமும் படத்திற்கு ஐஎஸ்ஐ சர்டிபிகேட்டுக்காக பாயின்ட் தேடவேண்டியதில்லை. அபியும் நானும், மொழி மாதிரியான தமிழுக்கு பெருமை சேர்த்த படங்களை உருவாக்க அவரால் மட்டுமே முடியும் என்கிற அளவுக்கு தகுதியான இயக்குனர். பயணம் மாதிரியான படங்கள் தமிழுக்கே கூட புதுசுதான். அவரது லேட்டஸ்ட் படமான ‘உப்புக்கருவாடு’ என்ன மாதிரியான படம்? வழக்கம்போல அவருக்கேயுரிய நகைச்சுவை இழையோட, கதைக்களமும் சினிமாதான் போலிருக்கிறது. இன்னும் சில தினங்கள்தானே, ரிலீசுக்கு? பார்த்துக் கொள்ளலாம்.
இந்த படத்தில் நந்திதாதான் ஹீரோயின். ஜோதிகா, த்ரிஷா என்று நெஞ்சம் நிறை நடிகைகளை வைத்து படம் தந்த ராதாமோகன் எப்படி நந்திதாவை செலக்ட் பண்ணினார். இந்த சந்தேகம் நமக்கு வரலாம். ஆனால் நந்திதாவுக்கு வந்ததுதான் ஷாக்! வாயை திறந்து கேட்டேவிட்டாராம். அதற்கு என்ன பதில் சொன்னார் ராதாமோகன்? அதை அவர் வாயாலேயே கேட்ருவோமா?
“அப்படி நந்திதா கேட்டதும் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. ஆனால் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. நான் என் மனைவியை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டவன். அவங்க கிறிஸ்துவர். நான் இந்து. சர்ச்ல பாதிரியார், ஏன் நீங்க இவங்களை செலக்ட் பண்ணீங்கன்னு கேட்டார். இப்படியொரு கேள்வியை அவர் கேட்பாருன்னு நான் எதிர்பார்க்கல. கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு, எனக்கு வேற யாரும் கிடைக்கலன்னு சொன்னேன். அந்த பதிலைதான் நான் நந்திதாவுக்கும் சொல்லணும்” என்றார் தனக்கேயுரிய ஹாஸ்யத்துடன்!
கருணாகரன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் என்று வயிறு வலிக்க சிரிக்க வைக்க ஒரு குழுவோடு வருகிறார் ராதாமோகன். அவர் படத்தில் வெறும் சிரிப்பு மட்டுமா இருக்கும்? அப்படியே யோசிக்கவும் நிறைய இருக்குமே!
