கவுதம் மேனன் மாறவில்லை! சிம்பு மட்டும் மாறணுமாம்?
பிளக்கை செருகி வெளிச்சமும் கொடுப்பார்… பியூசை பிடுங்கி இருட்டையும் அளிப்பார்… அப்படியொரு கலவையான பர்சனாலிடிதான் கவுதம் மேனன். அவரால் அமைந்த வாழ்க்கைதான். ஆனால் அநியாயத்துக்கு நாமம் போட்டால் எப்படிதான் பொறுத்துக் கொள்ள முடியும்? ஹாரிஸ் ஜெயராஜ்- கவுதம் மேனன் பிரிவுக்கு பின் இருந்தது வெறும் சம்பள பாக்கிதான். பலமுறை இதை பொருட்டாக நினைக்காத ஹாரிஸ், ஒரு கட்டத்தில் “போதும் சார் உங்க படம்” என்று கூறிவிட, அதற்கப்புறம் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று எங்கெங்கோ திரிந்தது கவுதம் மேனனின் கரை தேடிய ஓடம்!
சூர்யாவுக்கும் கவுதமுக்கும் ஏற்பட்ட பிணக்கு கூட, கதை விஷயத்தில் கம்மி. காசு விஷயத்தில் ஜாஸ்தி என்கிறது இன்டஸ்ட்ரி தகவல். இந்த நிலையில்தான் சிம்பு மீது செம டென்ஷன் ஆகி, ஓப்பனாக உள்ளம் திறந்துவிட்டார் கவுதம் மேனன். அவரால்தான் அச்சம் என்பது மடமையடா படம் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது என்றொரு தகவலை அவர் சொல்ல, வழக்கம் போல சிம்புவின் சட்டையில் மேலும் ஒரு பொத்தல் என்று சிரித்தது உலகம். சிம்புவும் சிரித்துக் கொண்டே நடையை கட்டிவிட்டார்.
ஆனால் நிஜம்? அந்த சிம்புவுக்காக “பாவம்” என்று முதன் முறையாக ஊர் உலகம் உச் கொட்டுகிற அளவுக்கு இருக்கிறது.
இந்த படத்திற்காக சிம்புவுக்கு பேசிய சம்பளத்தில் பல மடங்கு பாக்கி வைத்திருக்கிறாராம் கவுதம். அதனால்தான் சிம்புவும் அலட்சியம் அலட்சியமாக அந்த படத்தில் நடித்து வருகிறாராம். சரி… லேட்டஸ்ட் நிலவரம் என்ன? அவர் இனிமேல் நடிக்கப் போகும் AAA படத்திற்காக கெட்டப் மாறி விட்டார். மீண்டும் அச்சம் என்பது மடமையடா கெட்டப்புக்கு அவர் வரவேண்டும் என்றால், சில காலங்கள் ஆகுமாம்.
பிசாசுன்னு பேரு வச்சாச்சு. பிள்ளையாரேன்னு முகம் இருக்கணும்னா நடக்குமா?

