த்ரிஷா அஜீத் இடையே மோதலை உருவாக்க சதி?
கிரீடம் படம் வெளியான நேரம். சென்னையில் சில முக்கியமான தியேட்டர்களில் த்ரிஷா ரசிகர் மன்ற போர்டுகள் வைக்கப்பட்டன. அஜீத் ரசிகர்கள் விடுவார்களா? அந்த போர்டை அகற்றும்படி கூற, த்ரிஷா மன்றத்தின் தலைவி துத்துக்குடி பெண்மணி. அந்த மண்ணுக்கே உரிய வீரத்தோடு நீயாச்சு… நானாச்சு… என்று மல்லுக்கட்ட ஆரம்பித்துவிட்டார். அஜீத்தும் த்ரிஷாவும் பெருந்தன்மையோடு இந்த விஷயத்தை அணுகினாலும் ஆர்வமுள்ள ரசிகர்கள் கிட்டதட்ட மோதலுக்கே தயாராகிவிட்டார்கள்.
இப்போதும் அப்படியொரு சேம் பிளட்! அஜீத்தும் மன்றத்தை கலைத்துவிட்டார். த்ரிஷாவும் மன்றத்தின் மீது அக்கறை கொள்ளவில்லை. இந்த நேரத்தில்தான் அந்த புதிய பூகம்பம். தற்போது இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில் த்ரிஷாவின் பகுதிகள் அஜீத்திற்கு இணையாக இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, படத்தின் இன்னொரு நாயகியான அனுஷ்காவை டாமினேட் பண்ணுவது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.
இது முழுக்க முழுக்க கவுதம்மேனன்- த்ரிஷா நட்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சதி என்கிற பூகம்பத்தை கிளப்பிவிடுகிறார்கள் கோடம்பாக்கத்தில். படத்திற்கு இன்னும் பெயர் கூட வைக்கவில்லை. அதற்குள் அக்கப்போரா? இருந்தாலும் இந்த விஷயத்தை சுமூகமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். எனவே இதுபோன்ற செய்திகள் படம் வெளியாகிற நேரத்தில் மறுக்கப்படும். ஆனால் அதுவரைக்கும் இந்த விஷயத்தை மெல்லலாமே?
பின் குறிப்பு- சமீபத்தில்தான் ஹீரோக்களை வரிசைப்படுத்துகிற விவகாரத்தில் விஜய் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் த்ரிஷா. இப்போது அஜீத் ரசிகர்களையும் பகைத்துக் கொள்வாரா? எல்லாம் கவுதம் செய்யும் கலாட்டாதானே வேறொன்றில்லை!