அனிருத் கேட்ட சம்பளம் ஆடிப்போனார் உதயநிதி?
ஈர்க்குச்சி சைசுக்கு இருந்தாலும், தார் குச்சி போல முன்னேறிவிட்டார் அனிருத். அவரது லேட்டஸ்ட் படமான ‘வேலையில்லா பட்டதாரி’யும் சரியான கலெக்ஷ்ன். ஆளாளுக்கு நான் நீ என்று அனிருத்தின் கால்ஷீட்டுக்காக அடித்துக் கொள்கிறார்கள். விஜய்யின் கத்தி படத்திற்கும் இவர்தான் மியூசிக் என்பதால் இன்னும் கிரேஸ்! போதாத குறைக்கு டைரக்டர் ஷங்கரும் போகிற இடத்திலெல்லாம் அனிருத்தை புகழ்ந்து பேச, ராட்டினம் அந்தரத்திற்கும் மேலே போய், ஆகாயத்தையும் இடிக்க ஆரம்பித்திருக்கிறதாம்.
வேறொன்றுமில்லை. இந்த புகழுரைகளையும் பெரிய பட வாய்ப்புகளையும் பயன்படுத்தி தனது சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிவிட்டார் அனிருத். மற்றவர்களிடம் கூட அந்த பில்லை காட்டி அலற வைக்கலாம். என்னிடமேவா? என்று வேதனைப்படுகிறாராம் உதயநிதி. ‘என்றென்றும் புன்னகை’ பட இயக்குனர் டி.அகமது இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கப் போகிறார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு முதலில் இசையமைத்து தர ஒப்புக் கொண்ட அனிருத், அப்போதே சம்பளத்தை பற்றி பேசாமல், மிக சமீபத்தில்தான் பேசினாராம்.
‘இரண்டு கோடி கொடுத்திருங்க’ என்று அவர் கேஷூவலாக கேட்க, ‘ஊரெல்லாம் நீங்கதான் மியூசிக்குன்னு சொல்லிட்டேன். இப்ப வந்து இவ்வளவு கேட்டா?’ என்று ஆடிப்போனாராம் உதயநிதி. கூடி குறைய பேசி முடித்ததில், ஒன்றரையில் வந்து நின்றிருக்கிறார் அனிருத்.
ஏம்ப்பா… கோடி கோடின்றாங்களே, அதுக்கு எத்தனை சைபர்ப்பா?