தில்லுக்கு துட்டு விமர்சனம்
பக்கெட்ல ஊற்றிய பஞ்சாமிர்தம் போல பரம சுதந்திரமாக இருந்த சந்தானம், இப்போது பாக்கெட், சாஷே என்று கட்டுப்பாடுகளுக்குள் வந்துவிட்டார். பாடலுக்கு முறையா ஆடணும். பைட்டுன்னு வந்துட்டா பாய்ஞ்சு சண்டை போடணும், சென்ட்டிமென்ட் சீன்ல சுவத்துல சாஞ்சு உருகணும்… பிக்காஸ்? ஏன்னா அவரு இப்போ ஹீரோப்பா ஹீரோ! ‘நான் ஹீரோவாயிட்டேன்’ என்று அவர் அறிவித்தபோது, அந்த தில்லுக்காக திட்டு வாங்கியவர், இந்த படத்தில் அந்த பணியை செவ்வனே செய்து துட்டு வாங்கியிருக்கியிருக்கிறார். அதுதான் தில்லுக்கு துட்டு போல! (கதைப்படி பார்த்தால், தில்லுக்கு ‘சேட்டு’ என்றல்லவா இருக்கணும்?)
பொதுவாகவே பேய்ப்பட ஹிட்டுகளை லா.மு, லா.பி என்றுதான் வரையறுக்க வேண்டும்! ஏனென்றால் மிக சரியான சமன்பாடுகளுடன் பேய் படங்களை உருவாக்கி விருந்து வைத்த பெருமை லாரன்சுக்கு மட்டுமே உண்டு. அதற்கு முன்பு பேய் படங்கள் பல வந்திருந்தாலும், லாரன்சின் கைப்பக்குவம் தனி ருசி! வெகு காலத்திற்கு பிறகு அந்த பார்முலாவை உடைத்து, ச.மு, ச.பி என்று ஆக்கியிருக்கிறார் சந்தானம்.
பேபி கிளாஸ் காலத்தில் இவருக்கும் சேட்டுப் பெண் ஒருத்திக்கும் ஒரு இது! இருபது வருஷம் கழித்த பின்பும் அதே பையனை மனதில் வைத்திருக்கும் அந்த சேட்டு வீட்டு ஸ்வீட்டு, அவனை தேடிக் கொண்டேயிருக்க, மேற்படி பையன் சந்தானம்தான் என்று தெரிய வருகிறது. அப்புறமென்ன, கோடீஸ்வர அப்பாவின் முன் அழுது புலம்புகிறாள். அவளையும் தேற்றி, அதே நேரத்தில் சந்தானத்தையும் போட்டுத்தள்ள முடிவெடுக்கிறார் சேட்டு. பிரபல ரவுடி மொட்டை ராஜேந்திரனின் ஐடியா படி, ‘வாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறேன்’ என்று சிவன் கொண்டை மலை மேலிருக்கும் அந்த பேய் வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார் சேட்டு. அங்கு வைத்து சந்தானத்தை போடுவதாக திட்டம்.
சந்தானத்தை அச்சுறுத்த போலி பேய்களை உலவ விடும் ராஜேந்திரன், நிஜ பேய்களிடம் சிக்கிக் கொள்வதும், அங்கு திரிவதெல்லாம் செட்டப் பேய்கள் என்று கண்டுபிடிக்கும் சந்தானமும் நிஜ பேய்களிடம் மல்லுகட்டுவதும், கடைசியில் பேய் விட்டுச்சா , பயம் விட்டுச்சா என்று படம் முடிவதும் அல்டிமேட் கலகலப்பு! சீசனுக்கேற்ப கதை பண்ணினாலும், அதிலும் தன் தனி திறமையை காட்டிய டைரக்டர் ராம்பாலாவுக்கு ஒரு சபாஷ்!
சந்தானம் செமயாக தேறிவிட்டார். பைட் காட்சிகளில் பஞ்ச்சுக்கான டைமிங் என்ன, டான்ஸ் காட்சிகளில் சிம்புவையே மிஞ்சும் வேகம் என்ன, காதல் காட்சிகளில் கட்டுப்பாடற்ற ரொமான்ஸ் என்ன… அவரது டார்க்கெட்டில் பாதிக் கிணறு அல்ல, முக்கால் கிணறு ஜம்பிங்! வழக்கம்போல இவர் வாயில் விழுந்து வறுபடுவதற்கென்றே அந்த சேட்டும், மொட்டை ராஜேந்திரனும் பிறந்திருக்கிறார்கள் போல! பேய் பங்களாவுக்கு போய் சேர்வதற்கு முன்பே, ஒரு டிபன் கடையில் மாட்டிக் கொள்ளும் சந்தானம் குடும்பம் படுகிற அல்லல், தியேட்டருக்குள் திகில் பாய்ச்சுகிறது.
வந்திருப்பது நிஜ பேய் என்று அறியாமல், நம்ம ஆளுங்க என்ற நம்பிக்கையில் மொட்டையார் ராஜேந்திரன் பண்ணுகிற அலம்பல்கள், தியேட்டருக்கு வருகிற கூட்டத்தை ரிப்பீட் பண்ணும்! அவ்வளவு களேபரத்திலும் ‘கட்டிங்’ தேடும் உள்ளங்களான கருணாஸ், ஆனந்தராஜ் கலகலக்க விடுகிறார்கள்.
ஷனாயா என்ற புதுமுகத்தை சந்தானத்திற்கு ஜோடியாக்கியிருக்கிறார்கள். சற்றொப்ப கஜோல் போல இருப்பதாலேயே கேரக்டர் பெயரையும் கஜோல் ஆக்கியிருக்கிறார்கள். தன் வீட்டுக்கு திருட வந்த சந்தானத்தை சாமர்த்தியமாக மாட்டிவிடுகிற இவரே, அவரிடம் மாட்டிக் கொண்டபின் உருகுவது நடிப்பா என்றே சந்தேகம் வருகிற அளவுக்கு நடிக்கிறார். மறுபடியும் சந்தானமே வாய்ப்பு கொடுத்தாலொழிய கிளி ஒதுங்க கோடம்பாக்கத்தில் நிழல் கிடைப்பது சிரமம்.
அந்த குண்டு சேட்டு யாரோ? அவ்வளவு பிரமாதமாக நடித்திருக்கிறார். டப்பிங்கும் அவரே என்றால் அதற்காகவும் ஒரு சபாஷ்.
திபெத்திலிருந்து வந்த சீனா சாமியாரால் செய்ய முடியாததை கூட, நம்ம திருச்செந்தூர் முருகனின் வேல் செய்யும் என்பது இனம், மொழி, எல்லாவற்றையும் உள்ளடக்கிய தமிழ் கடவுள் பாசம். தொடருங்க சந்தானம்.
இசை தமன். அந்த முதல் பாடலான முருகன் பாடல், சரியான துள்ளிசை! படத்தில் சந்தானத்திற்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர், ஒன்று… ரஜினி படங்களில் பணியாற்றியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு ரஜினி படத்தையும் 100 முறையாவது கண்ணால் பார்த்து, கருத்தால் விழுங்கியிருக்க வேண்டும்.
அந்த உயர்ந்த மலையில் செட் போட்டார்களோ, மினியேச்சரோ, அல்லது கிராபிக்ஸ்சோ? நிஜம் போல காட்டிய ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி, தேவைப்பட்ட இடங்களில் இருட்டையும் வெளிச்சத்தையும் கூட நடிக்க வைத்திருக்கிறார். பாராட்டுகள்.
தில்லுக்கு துட்டு, திருவிழா ஹிட்டு!
-ஆர்.எஸ்.அந்தணன்