கூவம் கழிவை உரமாக பயன்படுத்துவது சாத்தியம்தான்! மாநகராட்சியை நாடிய பார்த்திபன்!
புதுமை விரும்பி பார்த்திபனின் அடுத்த அதிரடி, கூவம் கழிவை இயற்கை உரமாக பயன்படுத்தினால் என்ன? என்பதுதான்! சென்னையை தாண்டி பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் சென்று, இயற்கை காற்றும், இனிய அமைதியுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பார்த்திபன், பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு குடிசையில் சந்தோஷமாக இருக்கிறார். இங்கு இன்னும் ஏராளமான பூஞ்செடிகளையும், மரங்களையும் வளர்க்க பிரியப்படும் அவர், அதற்கு இயற்கை உரங்களை போடுகிற திட்டத்திலும் இருக்கிறார். அப்போது தோன்றிய யோசனைதான் கூவத்தில் வண்டலாக படிந்திருக்கும் இந்த கழிவுகளையே உரமாக்கினால் என்ன என்கிற யோசனை. இதை ஒரு பொது மேடையில் அவர் பேச, அது சாத்தியம்தானா என்கிற விவாதங்கள் எழுந்தன.
ஒரு ஆராய்ச்சியாளர், அது கூடவே கூடாது. கூவத்தில் படிந்திருப்பது விஷக்கழிவு. அதை உரமாக்கினால் விளைகிற பயிர்களும் விஷம்தான் என்றார். இது குறித்து பார்த்திபனிடம் பேசினோம்.
நான் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஒரு விஞ்ஞானியை வரவழைத்து ஆராய்ந்தேன். கூவத்தின் பல்வேறு பகுதிகளை ஆராய்ந்த அவர், அடையார் பகுதிகளில் கிடைக்கிற கழிவுகளை பயன்படுத்தலாம் என்று நிரூபணம் செய்திருக்கிறார். அங்கிருந்து உரத்தை எடுப்பதற்கு மாநகராட்சியின் அனுமதி வேண்டும். முறைப்படி மாநாகராட்சி கமிஷனரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். அவரும் ஆவண செய்வதாக கூறியிருக்கிறார் என்றார்.
அரசாங்கத்தின் கதவை யார் தட்டினாலும், அது காற்றில் பில்டர் ஆகி அரசின் காதுகளை சென்றடைய பல வருஷம் பிடிக்கும். தட்டியது பார்த்திபனாச்சே? ஒருவேளை உரம், ஜுர வேகத்தில் அவர் வீட்டை அடைந்தாலும் ஆச்சர்யமில்லை.