பாகுபலியோட போட்டியா? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!
அதென்னவோ தெரியவில்லை. ‘யாதும் ஊரே யாவரும் பாரீர்’ என்கிற விஷயத்தில் கன்னட, தெலுங்கு ரசிகர்களை விட, தமிழ் ரசிகர்கள் ரொம்ப மோசம். நம்ம ஊர் ஹீரோக்களை அங்கு சர்வ சாதரணமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அசலூர் ஹீரோக்களை நாம்தான் அவ்வளவு சீக்கிரம் மனசுக்குள் வர அனுமதிப்பதில்லை. நம்ம ஊர் விஜய், விஷால், சூர்யா, கார்த்தி, அவ்வளவு ஏன்? ஆர்யா வரைக்கும் கூட ஆந்திராவில் பெரிய நடிகர்கள்தான். ஆனால் அந்த ஊர் மோகன் பாபுவையோ, பாலகிருஷ்ணாவையோ, சிரஞ்சீவியையோ, மகேஷ்பாபுவையோ நாம்தான் அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் மட்டும் இந்த தடைகள் தானாகவே நீங்கும். மஹதீரா, நான் ஈ போன்ற படங்களை நாம்தான் சக்கை போடு போட வைஙத்தோமே? சரி போகட்டும்… விஷயத்துக்கு வருவோம்.
தமிழில் விஜய் நடித்த ஜில்லா படம் அதே பெயரில் தெலுங்கில் வெளியாகிறது. இந்த படத்தை ஆர்.டி.நேசன் இயக்கியிருக்கிறார். இதன் பாடல் வெளீயீட்டு விழா நாளை ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. தமிழில் பெரும் ஹிட்டடித்த அந்த படத்தில் விஜய்யுடன் மோகன்லால், காஜல் அகர்வால், பிரேமானந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதனால் படத்திற்கு இப்பவே எதிர்பார்ப்பு எகிருகிறதாம். ஜுலை பத்தாம் தேதி எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி பிரபாஸ், ராணா நடித்த பாகுபலி அங்கு திரைக்கு வருகிறது. அந்த நேரத்தில் வந்தால் சரிபட்டு வராது என்பதால் பல தெலுங்கு படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கின்றன. நிலைமை அவ்வளவு கொதி நிலையில் இருக்கும் போது ரொம்ப கூலாக நாங்க 3 ந் தேதி திரைக்கு வர்றோம் என்று அறிவித்திருக்கிறார்கள் தெலுங்கு ஜில்லாக்காரர்கள்.
இன்னும் ஒரு வாரத்தில் வானம் பொத்துக் கொண்டு ஊற்றப் போகிறது. இப்ப போய் விதை விதைச்சா எப்படிங்க? என்று விஜய் ரசிகர்கள் சற்றே ஜெர்க் ஆனாலும், நாங்க வருவோம்ல? என்கிறார்களாம் ஜில்லா படத்தை தெலுங்கில் வெளியிடும் தயாரிப்பு தரப்பினர். இந்த விஷயமெல்லாம் விஜய்க்கு தெரியுமா? அல்லது தெரிஞ்சே பாகுபலியோட மோதுவோம்னு முடிவெடுத்துட்டாரா?
பகவானே….!