சமாதான அழைப்பை நிராகரித்த விஷால்! தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைகுனிவா?

எப்படியாவது நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவை சரி செய்துவிட வேண்டும் என்று களத்தில் குதித்திருக்கிறது திரையுலகத்தின் முக்கியமான அமைப்புகள். இன்று உருவாகியுள்ள கூட்டமைப்பு, நடிகர் விஷால் அணியினரையும், சரத்குமார் அணியினரையும் வரும் 10 ந் தேதி சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது. ஆனால் ட்விட்டர் பக்கத்தில், சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியிருக்கிறார் விஷால். இதற்கிடையில் தங்கள் அணியை இந்த கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளும்படி அழைத்த தயாரிப்பாளர் சங்க தலைமையிலான கூட்டமைப்புக்கு பதில் கடிதமும் எழுதியிருக்கிறார்கள் விஷால் அணியினர். அந்த கடிதம் பின் வருமாறு-

வருகிற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே. வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து , மனுவை திருப்பி பெறுவதற்கான காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது. தேர்தல் வர இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் , தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் , தொழிலாளர் சம்மேளனம் இணைந்து உருவாக்கிய கூட்டறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது பார்த்து நாங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் அனைவரின் முயற்சி பாராட்டுக்குரியது.

ஆனால் இந்த தேர்தல் மூலம் நடிகர் சங்கம் பிளவுப்பட்டுவிடும் என்கிற உங்களது பயம் எதற்காக என்று தெரியவில்லை. அந்த பயத்திற்கு சில விளக்கம் அளிப்பது எங்களது கடமையாக நினைக்கிறோம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று குறைந்த பட்சம் 27 சங்கங்கள் இருக்கிறது. அனைத்து சங்கத்திற்கும் 3 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் முடிந்து இன்றுவரை எல்லோருமே ஒற்றுமையாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் 10 வருடம் தேர்தலே நடக்காத நடிகர் சங்கத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் ஜனநாயாக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்கிற எங்கள் பாண்டவர் அணியின் மூலம் நடிகர் சங்கம் பிளவுப்பட்டுவிடும் என்கிற உங்களது பயம் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்துகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கூட கடந்த முறை தேர்தல் நடந்த போது நீங்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி , அதன் பிறகு தேர்தலை நடத்தி இப்போது நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள்! ஒற்றுமையாகவும் இருக்குறீர்கள் ! இப்படி , உங்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஜனநாயக தேர்தல் எங்களுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக இருப்பது போல் நாங்கள் மட்டும் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது ?

நடிகர் சங்க தேர்தலில் எங்களால் மட்டும் பிளவு ஏற்படும் என்று நீங்கள் குழம்புவது ஏன் என்று புரியவில்லை. நடிகர் சங்க தேர்தலின் வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. தபால் ஓட்டு போடுபவர்களுக்கான அந்த மனுவவை தேர்தல் அதிகாரி அனுப்பப்படவுள்ள இந்த நிலையில் , பாண்டவர் அணியால் மட்டும் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்ற உங்கள் அறிக்கை எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது, மன வருத்தத்தையும் அளிக்கிறது .

இந்த கருத்தை எங்களிடம் சொல்வதைவிட கடந்த 10 வருடங்களாக தேர்தலில் நிற்காமலேயே பதவியில் இருப்பவர்களிடம் சொன்னால், நல்லதை செய்ய துடிக்கும் இந்த பாண்டவர் அணி அதை பெருமையாக வரவேற்போம்.இந்த தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் போராடி வருகிறோம். கடைசி வரை நாங்கள் அனைவரும் அதில் உறுதியாக நிற்ப்போம். இந்த தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம். இந்த கூட்டறிக்கையை வெளியிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி.

இப்படிக்கு
பாண்டவர் அணி

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முயற்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவாகவே கருதுகிறது சினிமாவுலகம்.

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    விஷால் சொன்னதில தப்பா ஒண்ணும் இல்லியே.
    அப்புறம் ஏன் தலைகுனிவா நினைக்கனும்?

    சமாதானத்துக்குப் கூப்பிடும் தயாரிப்பாளர் சங்கத்துல தேர்தல் நடந்த கதை ஊரரிஞ்சதாச்சே.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முதல்ல தேர்தல் நடக்குதா பாரு?! விஷாலுக்கு சிம்பு மிரட்டல்!

எத்தனை நாள் எரிச்சலோ? கொட்டித் தீர்த்துவிட்டார் சிம்பு. தண்ணீர் ஊற்றி அணைக்கிறேன் பேர்வழி என்று மைக்கை பிடித்த சிம்பு, ராதிகா, இருவரும் பற்றியெறியும் பிரச்சனையில் மேலும் கொஞ்சம்...

Close