இலங்கைக்கு படம் தர மாட்டேன்! சொன்ன சொல் மறந்த சுந்தரபாண்டியன்?
தமிழர்களுக்கு மறதி ஜாஸ்தி. இது அரசியல்வாதிகளுக்கும் தெரியும். அதைவிட சினிமாக்காரர்களுக்கு இன்னும் நன்றாக தெரியும்! இதற்கு சமீபத்திய சிறப்பான உதாரணம் அண்ணன் சுந்தரபாண்டியன், சினிமா போராளி, சசிகுமார்தான். கொஞ்சம் ரீவைன்ட் பட்டனை தட்டிவிட்டால் போராளி படம் ரிலீஸ் ஆகும்போது சசிகுமார் பேசிய நிஜ வசனங்கள் நினைவுக்கு வரும். மீடியாவுக்கு முன் ஆவேசம் காட்டிய சசிகுமார், “நான் நடித்த போராளி படத்தை இலங்கையில் வெளியிட அந்நாட்டு அரசு விரும்பவில்லை. அவர்கள் என்ன என் படத்தை வேண்டாம் என்பது. நான் சொல்கிறேன். என் படத்தின் எப்.எம்.எஸ் உரிமையை இலங்கைக்கு விற்கப் போவதில்லை. போராளி மட்டுமல்ல, இனி என் படங்கள் எதுவும் இலங்கையில் ரிலீஸ் ஆகாது” என்றார் ஆவேசமாக.
பிளாஷ்பேக் முடிந்ததா? இப்போது ஆக்ஷன் பிளாக்! தனது தயாரிப்பில் அவரே ஹீரேவாக நடித்து பாலா இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தை ஐங்கரன் நிறுவனத்திற்கு விற்று விட்டார் சசிகுமார். இந்த ஐங்கரன் நிறுவனம் இலங்கையில் அழுத்தமாக கால் ஊன்றியிருக்கும் லைக்கா நிறுவனத்தின் பிசினஸ் பார்ட்னர். அதை தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’ இலங்கையிலும் தடபுடலாக வெளியாகவிருக்கிறது.
சசிகுமாரின் ஆவேசம், இன உணர்வு, கொந்தளிப்பெல்லாம் குழம்பு சட்டிய இறக்கி வச்ச சூட்டோட முடிஞ்சு போச்சே! அதுக்கென்ன பண்ணுவதாம்? சினிமா இருக்கிற இருப்புல அவனவன் வேட்டிய காணோம்… பாட்டிய காணோம்னு ஓடுறான். இந்த அவசரத்துல கொள்கையாவது, கெத்தாவது?