பாலாவுக்கு பஞ்ச் வைத்த அதர்வா! நீந்தத் தெரிஞ்ச மீனுக்கு தொட்டி எதுக்கு?
ஊர் கண்ணை வேண்டுமென்றால் மறைக்கலாம்… ஆனால் நமக்கென்று ஒரு கண் இருக்கிறதல்லவா? அதுவும் அகக்கண். அதை மறைக்க முடியாதல்லவா? அதர்வா பாலா விஷயத்தில் வெளியுலகம் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சினிமாவுலகம் அறிந்து வைத்திருக்கும் தகவல்களே வேறு! அதாவது பரதேசி படம் பாலாவின் தயாரிப்பு என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, சினிமாவில் கிசுகிசுக்கப்பட்ட தகவல் என்ன தெரியுமா? அதர்வாவே பைனான்ஸ் செய்ய, அந்த பணம்தான் பாலாவின் பெயரில் செலவிடப்பட்டதாக கூறுகிறார்கள் இப்போதும். ஆக மொத்தம் பரதேசி எடுத்து பரதேசி ஆனவர் பாலா அல்ல, அதர்வா என்பது சொல்லாமலே விளங்கியிருக்குமே?
“பாலா அழைத்தால் எப்ப வேணும்னாலும் கால்ஷீட் கொடுக்க ரெடி” என்று கூறி வருகிறார் அதர்வா. சசிகுமாரும் அப்படிதான் கூறி வருகிறார். கிட்டதட்ட அதர்வா போலதான் சசியும். அவர் பணம்தான் பாலா தயாரிப்பாக உருமாறி வெளியுலகம் அறிய வந்தது. அந்த பஞ்சாயத்து இன்னும் போய் கொண்டிருப்பதைதான் உலகம் அறியுமே?
இதற்கிடையில் சினிமாவில் தொடர்ந்து தயாரிப்பாளராக இயங்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் அதர்வா. மறுபடியும் பாலாவிடம் போனால் பட்டை நாமம் என்று புரிந்து கொண்டவர் அவரே சொந்தமாக ஒரு சினிமா கம்பெனி துவங்கியிருக்கிறார். அந்த கம்பெனியின் பெயர் கிக்காஸ் என்டர்டெயின்மெடன்ட். எலி வளையா இருந்தாலும் தனி வளையா இருக்கணும்னு சும்மாவா சொன்னாங்க? இனி தேறிக்குவார் அதர்வா!